Wednesday, October 19, 2011

நண்பனைத் தேடி - 4. மர்மக் குகை

விக்கி அந்தப் பாறையிலும் ஏறிச் சென்று பார்க்க வேண்டும் என்றான். "ஏற்கனவே மணி 2 ஆகி விட்டது. நாம் உடனே திரும்பினாலும் ஹோட்டலுக்கு போக 6 மணிக்கு மேல் ஆகும். வா போகலாம்" என்றான் சுரேஷ். கிச்சா கூட அதைத் தான் கூறினான்.

ஆனால் விக்கி கேட்கவில்லையே. "நான் போகத்தான் செய்வேன்" என்று ஏற ஆரம்பித்தான் அந்த ஒற்றையடிச் செங்குத்துப் பாதையில். பின்னாடியே கிச்சாவும், சுரேசும் ஏறினர். கொஞ்ச தூரத்திலேயே சுரேஷிற்கு பயமாக இருக்க, "நீங்க போய்ட்டு வாங்க. நான் இங்கேயே இருக்கிறேன்" என்று கூறிவிட்டு, கீழே இறங்கி அந்த பாதையின் ஆரம்பத்தில் இருந்த ஒரு கல்லில் உட்கார்ந்தான்.

கிச்சாவிற்கு பயமாக இருந்தாலும், விக்கி முன்னாடி செல்வதால் ஒரு தைரியம் இருந்தது.

அந்த பாதையில் இருந்த படிகளில் ஏறுவது அவ்வளவு எளிதாக இல்லை. ஒரு படியில் இருந்து அடுத்தப் படியில் ஏற முன்னாடி உள்ளப் படிகளில் கை வைத்துப் பிடித்துதான் செல்ல வேண்டும். நிமிர்ந்து தான் நடப்பேன் என்றால், தலைகீழாக விழ வேண்டியதுதான்.

ஒரு வழியாக இருவரும் அருவியின் உச்சியை அடைந்தனர். மேலே சென்ற பின் இருவருக்கும் அவ்வளவு ஒரு சந்தோஷம். சந்தோஷத்தில் இருவரும் கத்தினர்; குதித்தனர்; சுரேஷை கூப்பிட்டு சந்தோஷ கூச்சலிட்டனர்.

திரும்பி மேலே பார்த்த சுரேஷ், "அப்பாடா! ஒரு வழியாக நல்லபடியாக ஏறிவிட்டனர்" என்று நினைத்தான். ஆனாலும் அவன் மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. அவர்கள் மறுபடியும் கீழே இறங்கி வரும் வரை அவனுக்குத் தலைவலிதான்.

மேலே அவர்கள் இருவரும் அந்த குகை அருகில் சென்றனர். குகையிலிருந்த கதவில் ஒரு பூட்டு போட்டு பூட்டியிருந்தனர்.

அந்த பூட்டின் அளவும், வடிவமும் வித்தியாசமாக இருந்தது. "ரொம்ப வருடங்களுக்கு முன்னாடி உள்ளதாக இருக்கலாம்" என்றான் விக்கி.

பின்னர் இருவருமாக அந்தக் குகை மீது ஏறினர். ஏறி அந்தப் பக்கம் பார்த்தால், ஒரு பெரிய ஏரி இருந்தது. அந்தக் குகையில் இருந்து நீளும் பாறை ஒரு வட்ட வடிவில் சென்றது. அது ஏரிக்குத் தடுப்பாக இருந்தது.

குகையிலிருந்து கீழே இறங்கிய இருவரும் ஒரு கல்லை எடுத்து பூட்டை உடைக்க முயற்சித்தனர். அப்போது சுரேஷ் அழைக்கும் சத்தம் கேட்டு "என்ன?" என்றான் கிச்சா. "டேய்! கீழே வாங்கடா. மணி இப்பவே 4 ஆயிடுச்சு" என்றான் சுரேஷ்.

அதற்குள் விக்கி பூட்டை உடைத்து கதவைத் திறந்தான். எனவே "டேய்! ஒரு 5 நிமிஷம் வெய்ட் பண்ணு. வந்திடுவோம்" என்றான் விக்கி.

No comments:

Post a Comment