Showing posts with label குறுநாவல். Show all posts
Showing posts with label குறுநாவல். Show all posts

Saturday, October 29, 2011

நண்பனைத் தேடி - 8. தடங்கல்

சுமார் 12 மணி வரை விக்கியையும், சுரேஷையும் விசாரித்த இன்ஸ்பெக்டர், நூறு வருடங்களாக தண்ணீர் வராத அருவியில் தண்ணீர் வருவதைப் பார்த்து, அவர்கள் சொல்வதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. நம்பவும் முடியவில்லை.

பின்னர், விக்கி மற்றும் சுரேஷ் மேல் எந்தத் தவறும் இல்லை. நடந்தது விபத்து என கேஸ் ஃபைல் செய்தார். அவர்கள் இருவரையும் ஹோட்டலுக்கு அனுப்பிவிட்டு, கிச்சாவைத் தேடும் பணியைத் தொடரச் சொன்னார்.

காலை 6 மணி வரைத் தேடி, மீட்புப் படையினர் சோர்ந்ததுதான் மிச்சம். கிச்சாக் கிடைக்கவில்லை.

நண்பனை பறிகொடுத்த துக்கத்தில் விடிய விடிய தூங்காமல் இருந்த விக்கியிடம் வந்த அகிலா, "டேய்! பாவி!  என் கிச்சாவைக் கூட்டிட்டுப் போய் கொன்னுட்டியே! ஏன்டா இப்படிப் பண்ணுன? அவன் உனக்கு என்ன துரோகம் பண்ணினான்? இப்படி அநியாயமா கொன்னுட்டியே!" என்று அழுது ஒப்பாரி வைத்தாள்.

விக்கியின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த சுரேஷ், சத்தம் கேட்டு விழித்துப் பார்த்தான். அகிலாவைச் சமாதானப்படுத்தலாம் என எழுந்தான் சுரேஷ். அதற்குள் விக்கி, "நிறுத்து! இன்னும் ஒரு தடவ கிச்சாவ கொன்னுட்டேன். கிச்சா செத்துப் போயிட்டான்னு யாராவது சொல்லுங்க; அப்புறம் நடக்கிறதே வேற!" என்று கத்தினான். பின்னர், "என் கிச்சா சாகல. அவன் காணாமப் போயிட்டான். என் கிச்சாக் கிடைப்பான். இல்லடா சுரேஷ்?" என்றான் விக்கி. என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்த சுரேஷ், பின் வேகமாக ஆமாம் என்பது போல் தலையசைத்தான்.

ஏதோ துக்கம் தாங்காமல் உளறுகிறான் என்று நினைத்தான் சுரேஷ். ஆனால் எங்கோ வெளியே போய்விட்டு வந்த விக்கி, தன் பேகில் (Bag) எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, "நான் தேடப்போறேன். வர்றியா?" என்றான். புரியாமல் விழித்த சுரேஷ், "எப்படி? எங்க போய்த் தேடப்போற?" என்றான்.

அதற்கு விக்கி, "நான் ஒருத்தர்கிட்ட மோட்டார் போட் (Motor Boat) வாங்கியிருக்கிறேன். அதுல அந்த ஆறு வழியாப் போய் பார்க்கலாம்" என்றான்.

சிறிது நேரம் யோசித்துப் பார்த்த சுரேஷ், போய் பார்த்துவிட்டு வந்தால், விக்கிக்கு ஆறுதலாக இருக்கும் என்று நினைத்து, அவனும் விக்கியுடன் கிளம்பினான்.

இருவரும் ஹோட்டலை விட்டு வெளியே இறங்க பேராசிரியர் அன்பு வந்து தடுத்தார். "யாரும் வெளியே போகக் கூடாது. மதியத்திற்கு மேல் எல்லோரும் காலேஜ் கிளம்பனும். டூர் கேன்சல் ஆயிடுச்சு. உள்ளே போங்க" என்றார்.

Monday, October 24, 2011

நண்பனைத் தேடி - 7. தேடுதல் ஆரம்பம்

பள்ளத்திலிருந்து வெளியே வந்து அந்தப் பாதை அருகே அமர்ந்திருந்த விக்கிக்கு, அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் உண்டாகியிருந்த அதிர்ச்சியிலிருந்து மீள சில நிமிடங்கள் ஆனது.

பின்னர் தான் எங்கிருக்கிறோம் என்பதை உணர்ந்த விக்கி, கிச்சாவைத் தண்ணீர் அடித்துச் சென்றது நினைவுக்கு வர, எழுந்து பள்ளத்தில் போய் குதிக்க ஓடினான்.

அவனைத் தடுத்த சுரேஷ், "நில்லுடா! எங்க போற? உனக்கு நீச்சல் தெரியாதுல்ல? எல்லாம் முடிஞ்சு போச்சு. ஒண்ணும் பண்ண முடியாது" என்றான்.

"இல்லடா! கிச்சா... கிச்சா, தண்ணில" என்று சொல்லிவிட்டு மீண்டும் குதிக்கப்போனான். "நில்லுடா! சொல்றது காதுல விழல? இதுல போய் அவனைக் காப்பாத்த முடியாது. நல்லா நீச்சல் தெரிஞ்சவங்களே, இதுல போய் தப்புறது கஷ்டம். நம்மால முடியாது" என்றான்.

விக்கிக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. அவனுக்கு மறுபடியும் உள்ளே குதிச்சுடனும் என்கிற எண்ணமே இருந்தது. சுரேஷோட பிடியில தான் நின்னுட்டு இருந்தான். சுரேஷ் மறுபடியும், "போடா! போய் குதி! பின்னாடியே நானும் வந்து குதிக்கேன்! மூனுபேரும் ஒண்ணா போய் சேருவோம்" என்று விட்டு விட்டான்.

குதிக்கச் சென்றவன் பயந்து நிற்க, சுரேஷ் அருகில் வந்து அவனைத் தொட்டான். "அய்யோ! கிச்சா..." என்று அலறினான் விக்கி. சுரேஷ் அவனை சமாதானப்படுத்தவா, இழந்து போன நண்பனுக்காக அழவா என்று தடுமாறினான்.

இருவரும் ஹோட்டலுக்கு வந்து சேரும் போது இரவு மணி 10. அவர்களுக்காக வாசலிலேயே காத்திருந்த பேராசிரியர் அன்பு, அவர்களுக்கு கால் பண்ணி பண்ணி சோர்ந்து போய் இருந்தார்.

அவர்கள் வருவதைப் பார்த்ததும், நல்லா திட்ட வேண்டுமென்று எழுந்து நின்றார். விக்கியோ பேயறைந்தவன் போலிருக்க, சுரேஷோ பறிகொடுத்தவன் போலிருக்க, கிச்சாவைக் காணாததால், அவர்களைத் திட்டுவதற்கு பதில், "கிச்சா எங்கே?" என்றார் பேராசிரியர் அன்பு.

எதுவும் பேசாமல் விக்கி நிற்க, அழுது அழுது கிச்சாவைப் பறி கொடுத்த விஷயத்தை விளக்கினான் சுரேஷ். வாயடைத்து நின்ற பேராசிரியர், முதல் வேளையாகச் சென்று போலீஸிற்கு போன் செய்தார்.

செய்தி கேட்ட மாணவ மாணவியர் அனைவரும் துக்கத்தில் மூழ்கினர். விரைந்து வந்த போலீசார், பேராசிரியர், விக்கி மற்றும் சுரேஷை அழைத்துக் கொண்டு, மீட்புப் படையுடன் அந்த அருவிக்குச் சென்றார்.

Sunday, October 23, 2011

நண்பனைத் தேடி - 6. இழப்பு

கதவைத் தள்ள முடியாததால் பதட்டத்தில் இருந்த விக்கியிடம், தன் கையில் இருந்த டார்ச்சைக் கொடுத்தான் கிச்சா. பின்னர் கதவிலிருந்து சில அடிகள் பின்னே சென்று, முட்டளவு தண்ணீரிலும் தன் பலம் முழூவதும் கொடுத்து ஓடி வந்து, கதவில் மோதினான். கதவு உடைந்து விழ, கிச்சாவும் கதவோடு சேர்ந்து போய் விழுந்தான்.

வேகமாக சென்று கொண்டிருந்த அருவியின் தண்ணீர், கதவோடு கிச்சாவையும் அடித்துச் சென்று கீழே தள்ளியது.

கதவு உடைந்த சத்தம் கேட்டு பார்த்த சுரேஷ், குகையின் மேலிருந்து நிரம்பி வழியும் தண்ணீரோடு கதவு விழ, கிச்சாவும் விழுவதைப் பார்த்தான்.

அருவி விழும் பள்ளத்திலிருந்து பிரிந்து செல்லும் தண்ணீரில், ஆறு போல் தண்ணீர் செல்லும் பாதை வழியாக கிச்சாவைத் தண்ணீர் அடித்துச் சென்றது.

ஒற்றையடிப் பாதையில் கொஞ்ச தூரமே ஏறி இருந்த சுரேஷ், கீழே இறங்கி வந்து அருவித் தண்ணீர் விழும் பள்ளத்தை நெருங்கி, உள்ளே குதித்தான்.

அடுத்த நொடி, கிச்சாவைத் தண்ணீர் அடித்துச் செல்ல, அவனைப் பிடிக்கலாம் என்று வெளியே வந்த விக்கியையும் தண்ணீர் அடித்துக் கீழே தள்ளியது. சுரேஷ் உள்ளே குதிக்கவும், அந்தப் பள்ளத்தில் வந்து விக்கி விழவும் சரியாக இருந்தது. நல்ல வேளையாக விக்கியையும் அடித்துச் செல்லாமல், சுரேஷ் பிடித்து இழுத்து பள்ளத்திற்கு வெளியே வந்து விட்டான்.

அந்த வேகமான தண்ணீரின் ஓட்டத்தில் விக்கியுடன் எதிர் நீச்சல் போட சுரேஷ் மிகவும் தடுமாறியே வந்து சேர்ந்தான். மறுபடியும் அந்த ஓட்டத்தில் சென்று கிச்சாவைக் காப்பாற்ற முடியும் என்கிற நம்பிக்கை சுரேஷிற்குத் துளி அளவும் இல்லை.

Friday, October 21, 2011

நண்பனைத் தேடி - 5. வெள்ளம்

உள்ளே சென்ற இருவருக்கும் ஒரே ஆச்சரியம். குகைக்குள் கொஞ்சமும் வெளிச்சம் வராததால் இருட்டாக இருந்தது. ஆனால் ஒரு மூலையிலிருந்து நீல நிற ஒளி தெரிந்தது. ரேடியம் மாதிரி ஒளிர்ந்தது அந்த சிறிய கல்.

தன் பேன்ட் பையில் இருந்து டார்ச் எடுத்த கிச்சா, அந்த கல் இருக்கும் இடத்தை நோக்கி டார்ச் அடித்தான். அந்த கல் இருந்த இடம் அவர்களுக்குக் குழப்பத்தைத் தந்தது.

ஏனென்றால் அவர்கள் இருக்கும் குகை போன்ற ஒரு சிறிய மாதிரி குகை; அதின் உச்சியில் உள்ள ஒரு சிறிய ஒட்டையை அடைத்தவாறு அந்தக் கல் இருந்தது. அந்த மாதிரி குகையின் அருகிலிருந்து பாறை போன்ற தடுப்பு நீண்டு வட்டமாக அமைந்திருந்தது. அந்த வட்டத்தின் நடுவில் ஏரியைப் போன்றே தண்ணீர் இருந்தது.

விக்கி அருகில் சென்று, அந்த நீல நிற டைமன்ட் போன்ற கல்லை, அதன் இடத்திலிருந்து உருவி எடுத்தான். அடுத்த விநாடி அந்த நீல நிற ஒளி, சிவப்பு நிற ஒளியாக மாறி அவன் கையை சுட்டெரித்தது. உடனே விக்கி, சூடு தாங்காமல் கல்லை கீழே போட்டான். கீழே விழுந்தக் கல் ஒளியை இழந்தது. இருட்டில் காணாமல் போன கல்லை டார்ச் அடித்துத் தேடினர்.

கீழே அவர்களுக்காகக் காத்திருந்த சுரேஷ், குகைக்குள் சென்றவர்கள் எப்போது வெளியே வருவார்கள் என பார்த்துக் கொண்டு நின்றான். அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, குகையின் பின்னால் இருந்து தண்ணீர் எழுந்து வந்தது. எழுந்து வந்த தண்ணீரின் வேகத்தில் திறந்து இருந்தக் குகைக் கதவு மூடியது. தண்ணீரோ அருவியாகக் கீழே கொட்டியது.

அருவித் தண்ணீரின் அளவு, மற்ற எல்லா அருவிகளில் வருவதை விட அதிக அளவு இருந்தது. இக்கட்டான சூழலை உணர்ந்த சுரேஷ், நண்பர்களுக்கு உதவி செய்ய, அந்த செங்குத்தான பாதையில் ஏற ஆரம்பித்தான்.

குகைக்குள் கல்லைத் தேடிக்கொண்டிருந்த விக்கியும் கிச்சாவும் திடீரென்று கதவு மூடப்படவும், பயந்து கதவை நோக்கி ஓடினர். தங்கள் பலம் முழூவதும் கொடுத்தும் அவர்களால் திறக்க முடியவில்லை. இதற்கிடையில் குகையின் உச்சியில் ஒரு கல் நகர்ந்து ஒரு ஓட்டை உருவானது. அதன் வழியாகத் தண்ணீர் குகையின் உள்ளே வர ஆரம்பித்தது.

ஒரு ஆள் சென்று விடக் கூடிய அளவு உள்ள அந்த ஓட்டை வழியே வரும், வேகமான தண்ணீர், அரை நிமிடத்தில் குகையில் தண்ணீரின் அளவை அவர்கள் முட்டிக்கு உயர்த்தியது.

Wednesday, October 19, 2011

நண்பனைத் தேடி - 4. மர்மக் குகை

விக்கி அந்தப் பாறையிலும் ஏறிச் சென்று பார்க்க வேண்டும் என்றான். "ஏற்கனவே மணி 2 ஆகி விட்டது. நாம் உடனே திரும்பினாலும் ஹோட்டலுக்கு போக 6 மணிக்கு மேல் ஆகும். வா போகலாம்" என்றான் சுரேஷ். கிச்சா கூட அதைத் தான் கூறினான்.

ஆனால் விக்கி கேட்கவில்லையே. "நான் போகத்தான் செய்வேன்" என்று ஏற ஆரம்பித்தான் அந்த ஒற்றையடிச் செங்குத்துப் பாதையில். பின்னாடியே கிச்சாவும், சுரேசும் ஏறினர். கொஞ்ச தூரத்திலேயே சுரேஷிற்கு பயமாக இருக்க, "நீங்க போய்ட்டு வாங்க. நான் இங்கேயே இருக்கிறேன்" என்று கூறிவிட்டு, கீழே இறங்கி அந்த பாதையின் ஆரம்பத்தில் இருந்த ஒரு கல்லில் உட்கார்ந்தான்.

கிச்சாவிற்கு பயமாக இருந்தாலும், விக்கி முன்னாடி செல்வதால் ஒரு தைரியம் இருந்தது.

அந்த பாதையில் இருந்த படிகளில் ஏறுவது அவ்வளவு எளிதாக இல்லை. ஒரு படியில் இருந்து அடுத்தப் படியில் ஏற முன்னாடி உள்ளப் படிகளில் கை வைத்துப் பிடித்துதான் செல்ல வேண்டும். நிமிர்ந்து தான் நடப்பேன் என்றால், தலைகீழாக விழ வேண்டியதுதான்.

ஒரு வழியாக இருவரும் அருவியின் உச்சியை அடைந்தனர். மேலே சென்ற பின் இருவருக்கும் அவ்வளவு ஒரு சந்தோஷம். சந்தோஷத்தில் இருவரும் கத்தினர்; குதித்தனர்; சுரேஷை கூப்பிட்டு சந்தோஷ கூச்சலிட்டனர்.

திரும்பி மேலே பார்த்த சுரேஷ், "அப்பாடா! ஒரு வழியாக நல்லபடியாக ஏறிவிட்டனர்" என்று நினைத்தான். ஆனாலும் அவன் மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. அவர்கள் மறுபடியும் கீழே இறங்கி வரும் வரை அவனுக்குத் தலைவலிதான்.

மேலே அவர்கள் இருவரும் அந்த குகை அருகில் சென்றனர். குகையிலிருந்த கதவில் ஒரு பூட்டு போட்டு பூட்டியிருந்தனர்.

அந்த பூட்டின் அளவும், வடிவமும் வித்தியாசமாக இருந்தது. "ரொம்ப வருடங்களுக்கு முன்னாடி உள்ளதாக இருக்கலாம்" என்றான் விக்கி.

பின்னர் இருவருமாக அந்தக் குகை மீது ஏறினர். ஏறி அந்தப் பக்கம் பார்த்தால், ஒரு பெரிய ஏரி இருந்தது. அந்தக் குகையில் இருந்து நீளும் பாறை ஒரு வட்ட வடிவில் சென்றது. அது ஏரிக்குத் தடுப்பாக இருந்தது.

குகையிலிருந்து கீழே இறங்கிய இருவரும் ஒரு கல்லை எடுத்து பூட்டை உடைக்க முயற்சித்தனர். அப்போது சுரேஷ் அழைக்கும் சத்தம் கேட்டு "என்ன?" என்றான் கிச்சா. "டேய்! கீழே வாங்கடா. மணி இப்பவே 4 ஆயிடுச்சு" என்றான் சுரேஷ்.

அதற்குள் விக்கி பூட்டை உடைத்து கதவைத் திறந்தான். எனவே "டேய்! ஒரு 5 நிமிஷம் வெய்ட் பண்ணு. வந்திடுவோம்" என்றான் விக்கி.

Wednesday, September 7, 2011

நண்பனைத் தேடி - 3. வறண்ட அருவி

"நான் இதுவரை அந்த அருவியில் தண்ணீர் வந்து பார்த்ததில்லை. ஆனால் சுமார் 100 வருஷத்திற்கு முன்னாடி, அதுல தான் அதிகமா தண்ணி வருமாம். அதுமட்டுமில்லாம கோடை காலத்தில கூட அதுல தண்ணி வரும் என்று என் தாத்தா சொல்லியிருக்கிறார்" என்றார், 40 வயது மதிக்கத்தக்க அந்த பழ வியாபாரி.

அவர் சொன்னதைக் கேட்டதும், விக்கிக்கு அதைப் பற்றி இன்னும் தெரிஞ்சுக்க ஆர்வமா இருந்தது. ஆனா அந்த அருவி இருக்கிற இடத்துக்கு போற வழி பராமரிக்காம விட்டதால சிதைஞ்சு போச்சு.

விக்கி அங்க போய் பார்க்கலாம் என்றான். சுரேஷ் மற்றும் கிச்சா அதற்கு மறுத்தனர். "நீங்க வராட்டி போங்க. நான் போய் பார்த்துவிட்டு வரேன்" என்றான் விக்கி. அவனை தனியாக விட முடியாமல் மற்ற இருவரும் உடன் சென்றனர்.

ஒரு வழியாக அந்த அருவியிலிருந்து தண்ணீர் கீழே விழும் இடத்தை அடைந்தனர். தண்ணீர் விழும் இடம் மற்ற அருவிகளில் இருப்பதை விட ஆழமாக இருந்தது. அதிலிருந்து தண்ணீர் நிரம்பி வெளி வருவது இரண்டாக பிரிந்திருந்தது. அதில் ஒரு பிரிவு சிறிது தூரம் ஓடி செண்பகாதேவி அருவியில் போய் சேர்ந்தது.

மறுபுறம் உள்ள பிரிவு நீண்ட தூரம் ஒரு சிறிய ஆறு போல் சென்றது. எதிலுமே தண்ணீர் இல்லாமல் ஆற்றுப்பாதை வறண்டு போய் இருந்தது. அருவியின் உயரம் சுமார் 50 அடி இருந்தது. அதன் உச்சியில் சிறிய குகை போன்று ஒரு பாறை தெரிந்தது. அதில் கதவு இருந்தது. அது மூடப்பட்டிருந்தது.

அந்த இடத்திற்கு செல்ல ஒரு ஒற்றையடி பாதை அருவியின் அருகில் இருந்தது. மிகவும் செங்குத்தான அப்பாதையில் சில இடங்களில் மட்டும் கற்களால் ஆன படிகள் இருந்தன.

(தேடுதல் தொடரும்…)

Tuesday, September 6, 2011

நண்பனைத் தேடி - 2. செண்பகாதேவி அருவி


முதலில் குற்றாலம் சென்றனர். அங்கே ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து அனைவரும் தங்கினர். பேராசிரியர் அன்பு, அனைவரையும் அழைத்து சில கண்டிஷன்ஸ் கூறினார், “அருவியில் குளிக்கவோ, ஷாப்பிங் பண்ணவோ, பாடம் சம்மந்தமாக தாவரங்கள் சேகரிக்கவோ யாரும் தனியாக செல்லக் கூடாது. முக்கியமாக மாணவிகள் பேராசிரியை துணை இல்லாமல் செல்லக் கூடாது. மாணவர்களும், குறைந்தது நான்கு பேராவது சேர்ந்துதான் செல்ல வேண்டும். எங்கு சென்றாலும் மாலை 6-7 மணிக்குள் ஹோட்டலுக்கு திரும்பி விட வேண்டும்.”

கொஞ்ச நேரம் விக்கியுடன் ஜாலியாக சுற்றலாம் என்று நினைத்த வளர்மதி, அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிந்ததும், மனசுக்குள் பேராசிரியர் அன்புவை திட்டி தீர்த்தாள். வளரும் அகிலாவும் மற்றும் மூன்று மாணவிகளும், பேராசிரியை செல்வியுடன் சேர்ந்து செல்வதாக முடிவு செய்தனர். மற்ற ஐந்து மாணவிகள் பேராசிரியை தேவிகாவுடன் சேர்ந்து செல்வதாக முடிவு செய்தனர்.

விக்கி, கிச்சா மற்றும் சுரேஷ் கொஞ்ச நேரம் பேராசிரியை செல்வியுடன் செல்வதாக கூறி அவர்களுடன் சென்றனர். பின்னர் வளரும் அகிலாவும் பேசுவதாக தெரியவில்லை. எனவே மூவரும் அங்கிருந்து பிரிந்து தனியாக சுற்றச் சென்றனர்.

அங்கு இருக்கிறதிலியே உயரமா இருக்கிற அருவியில போய் குளிக்கலாம் என விக்கி ஐடியா கொடுக்க, மூவருமாக செண்பகாதேவி அருவிக்கு முதலில் சென்றனர். அங்கிருந்து பார்க்க இன்னும் உயரத்தில் ஒரு அருவி இருந்ததற்கான தடயம் இருக்க, அதிலிருந்து தண்ணீர் வரவில்லை. எனவே அதைப் பற்றி அங்கிருந்த ஒரு பழ வியாபாரியிடம் விசாரித்தனர்.

நண்பனைத் தேடி - 1. பயணம் ஆரம்பம்

ரோஸ்மேரி கலைக் கல்லூரியில்...

இளநிலை தாவரவியலில் முதலாமாண்டு பயிலும் மாணவர்களின் வகுப்பறை வழக்கத்திற்கு மாறாக பரபரப்பாக இருந்தது. அதற்கு காரணம், எல்லோரும் இன்னும் ஒரு வாரத்தில் செல்ல இருக்கும் கல்வி சுற்றுலா பற்றி பேசிக் கொண்டு இருந்தது தான். பேராசிரியர் அன்புச்செல்வன் உள்ளே வரவும் அனைவரும் அமைதியாயினர். அரை மணி நேர வகுப்பிற்கு பின், அவர் சுற்றுலாவிற்கு யாரெல்லாம் வருவதாகக் கேட்டார். உடனே மாணவர்களில் ஒருவன் தங்கள் பெயர்கள் எழுதப்பட்ட பேப்பரை அவரிடம் தந்தான். மொத்தம் 45 பேர் கொண்ட வகுப்பில் 30 பேர் மட்டுமே பெயர் கொடுத்திருந்தனர். அதைப் பார்த்துவிட்டு, 10 மாணவிகள் மட்டுமே பெயர் கொடுத்திருந்ததால், இருவரையும் ஒன்றாக அழைத்துச் சென்று விடலாம் என முடிவு செய்தார்.

அந்த புளிய மரத்தடியில் எப்போதும் போல் மாலை கல்லூரி முடிந்த பின் அவர்கள் ஐந்து பேரும் சங்கமமாயிருந்தனர். அந்த அவர்கள்: கிச்சா என்ற கிருஷ்ணகுமார், விக்கி என்ற விக்கிரமாதித்தன், சுரேஷ், கிச்சாவின் தோழி அகிலா, விக்கியின் தோழி வளர்மதி.
சுற்றுலா நாட்கள் 10 என்பதால் அகிலா வீட்டில் முதலில் அனுமதிக்கவில்லை. தான் எவ்வாறு விளக்கி அவர்களை சம்மதிக்க வைத்தாள் என அகிலா கூறி சந்தோஷப்பட்டாள். சுரேஷோ சுற்றுலா செல்வதற்காகவே தான் சேர்த்து வைத்த பணத்தில் தான் வருவதாகவும், வீட்டில் கேட்டதற்கு தரவில்லை என்றும் கூறினான். இவ்வாறாக ஒவ்வொரு மரத்தடியிலும் சுற்றுலா பற்றிய பேச்சே இருந்தது. ஒரு மணி நேர அரட்டைக்கு பின் விடை பெற்று அவரவர் வீட்டிற்கு கிளம்பினர்.

ஒரு வாரம் எப்படி சென்றது என்றே தெரியாமல் ஓடி விட்டது. அடுத்த நாள் (திங்கட்கிழமை) விடிந்தால், 5 மணிக்கு எல்லாம் பஸ் கிளம்பி விடும். வளர்மதிக்கு அதை நினைத்தே இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. பின்னர் எப்படியோ தூங்கிப் போனவள், காலை 4 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள். தேவையான டிரஸ், மற்ற பொருட்களையெல்லாம் முந்தின நாளே பேகில் எடுத்து வைத்து விட்டாள்.

எல்லோரும் கரெக்டா 5 மணிக்கு கல்லூரியில் ஆஜராகியிருந்தனர். 40 மாணவ மாணவிகள், இரண்டு பேராசிரியைகள் மற்றும் ஒரு பேராசிரியரைக் கொண்ட சுற்றுலாக் குழு பஸ்ஸில் மேற்கு தொடர்ச்சி மலைகளை நோக்கி பயணம் செய்தது.

(தேடுதல் தொடரும்…)